கொல்கத்தா

சிபிஐ விவகாரத்தில் முக்கிய புள்ளியான கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் பற்றிய விவரங்கள் இதோ :

சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரை விசாரிக்க நேற்று முன் தினம் சென்ற போது அவர்களை விசாரணை செய்ய விடாமல் மேற்கு வங்க காவல்துறை தடுத்தது பெரிய விவகாரம் ஆகி உள்ளது.   சிபிஐ நடவடிக்கைகளை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.   நாம் தற்போது ஆணையர் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்வோம்

கொல்கத்தா நகர காவல்துறை ஆணையரான ராஜீவ் குமார் ரூர்கி ஐஐடியில் பயின்ற ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார், அவர் மிகவும் நேர்மையானவர் என பல முறை அவருடைய மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டு பெற்றுள்ளார். அவருடன் பணி புரிபவர்கள் மற்றும் நண்பர்கள் என அனைத்து வட்டாரங்களிலும் அவர் நேர்மை, அமைதி, சுறுசுறுப்பு, தொழில் நுட்ப அறிவுள்ளவர் என புகழாரம் சூட்டுகின்றனர்.

அதே நேரத்தில் அவருக்கு தனது மேலதிகாரிகள் மீது அளவு கடந்த விசுவாசாம் உள்ளதகவும் தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் அவர் ஒரு ஏகலைவனைப் போல் மேலே உள்ளவர்கள் விரலைக் கேட்டாலும் வெட்டி அளிப்பார் என அவருடைய நெருங்கிய நண்பர் ஒரு வர் தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை மேலிடம் எதை சொன்னாலும் தட்டாமல் செய்வார். அதனால் தான் தற்போது இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார் எனவும் அந்த நண்பர் கூறி உள்ளார்.

சாரதா சிட்பண்ட் மூலம் பலகோடி ஊழல் நடந்ததாக எழுந்த வழக்கு தற்போது சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊழலில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை முதலில் விசாரித்தவர் ராஜிவ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பிதான்னகர் பகுதியில் காவல்துறை ஆணையராக பதவி வகித்து வந்தார். அவர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கை கடந்த 2014 வரை அதாவது சிபிஐக்கு மாற்றப்படும் வரை விசாரித்து வந்தது.

அப்போது இந்த வழக்கில் பல முக்கிய சாட்சியங்களை ராஜிவ்குமார் அழித்து விட்டதாக சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இந்த ஊழல் குறித்த தகவல்கள் வெளி வந்ததில் இருந்தே பாஜக இதில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவர் கட்சியை சேர்ந்த மதன் மித்ரா, முகுல் ராய் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறி வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவில் இருந்து பல பாஜக தலைவர்கள் இந்த ஊழலில் மம்தா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக பொதுக் கூட்டங்களில் பேசி வந்துள்ளனர்.

ஆனால் தற்போது திடீரென சிபிஐ தனது விசாரணை ராஜிவ் குமார் பக்கம் திருப்பியதால் அரசியல் தலைவர்கள் பலர் மத்திய அரசின் நோக்கத்தை சந்தேக்கிக்கின்றனர். குறிப்பாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இண்த விசாரணை நடத்து முயல்வது திருணாமுல் காங்கிரசின் நற்பெயரை கெடுக்க நடந்துள்ளதாக திருணாமுல் கட்சி தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.