சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு  தொடர்பான விசாரணைக்கு,  கோவையில் வழக்கை விசாரித்து வரும்  சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெ. வளர்ப்பு மகன்  சுதாகரன் இன்று காலை ஆஜரானார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சுதாகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில்,  போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், கூடுதல் தகவல்களை பெறும் வகையில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.  சமீபத்தில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரித்த  நிலையில், கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்த  சுதாகரனுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

அதன்படி,  மார்ச் 25 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் கூறியபடி, சுதாகரன் இன்று( மார்ச் 27ம் தேதி) கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில்  நேரில் ஆஜரானார்.

அவரிடம் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.