மைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் இன்று வருமானவரி ரெய்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடவே, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது.

அந்தக்காலத்தில் இருந்தே, வருமானவரித்துறை என்பது மத்திய அரசின் ஏவல் துறை என்பதாக ஒரு  குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம்…

ஹேமமாலினி – ஜெயா சக்ரவர்த்தி

1983ம் வருடம்…

தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி  முன்பு “தேசிய சஞ்சய் கட்சி” என்ற கட்சியை  நடத்தி வந்தார்.

அக் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் பெரம்பூர் போரக்ஸ் சாலையில் இருந்தது. தமிழக தலைவராக இருந்தவர் எம்.பி. திருஞானம்.

ஒரு நாள் அந்தக் கட்சியின்  அலுவலத்துக்கு பெரிய படகு கார் ஒன்றில் வந்து இறங்கினார் ஜெயா சக்ரவர்த்தி.

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஹேமமாலினியின் தாயார் இவர். ஹேமமாலினி போலவே (அந்தக்காலத்தில்) பிரபல நாட்டிய தாரகையாக விளங்கியவர். அதோடு அரசியல்வாதியும்கூட.

காரைவிட்டு இறங்கிய ஜெயா சக்ரவர்த்தி, அலுவலகத்துக்குள் சென்றார்.

மாநிலத்தலைவரிடம், “உங்கள் கட்சியில் சேர்கிறேன். உறுப்பினர் படிவம் கொடுங்கள்” என்றார்.

கொடுக்கப்பட்டதும்  அதை நிரப்பித்தந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார்.

மறுநாள்…

“மேனகா காந்தியின் கட்சியில் ஹேமமாலியின் அம்மா  ஜெயா சக்ரவர்த்தி சேரந்தார்” என்பதுதான்  மறுநாள், நாடு முழுதும் உள்ள நாளிதழ்களில் தலைப்புச் செய்தி.

அதற்கு அடுத்த நாள்..

ஜெயா சக்ரவர்த்தியின்  மகள் ஹேமமாலினி. அவரது கணவர் பிரபல நடிகர்  தர்மேந்திரா.

இவர்களுக்குச் சொந்தமான   மும்பை வீடுகள்  மற்றும் அலுவலகங்களில் வருமான வரி ரெய்டு நடந்தது.  சில பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அப்போது பிரதமர் இந்திராகாந்தி. , தனக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்த மருமகள் மேனகா காந்தியின் கட்சியில்  ஜெயா சக்ரவர்த்தி சேர்ந்ததை  விரும்பவில்லை எனவும் அதனாலேயே இந்த ரெய்டு நடந்தது என்றும் அப்போது விமர்சிக்கப்பட்டது.

அதற்கும் அடுத்த நாள்…

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த “சஞ்சய் மன்ச் கட்சி” கட்சி அலுவலத்துக்கு  அதே படகு காரில் வந்து இறங்கினார் ஜெயா சக்ரவர்த்தி. இப்போது கொஞ்சம் படபடப்பாக இருந்தார்.

மாநிலத் தலைவரிடம், “கட்சியை விட்டு விலகுகிறேன்” என்றவர் விலகல் கடிதத்தையும் அவசர அவசரமாக எழுதிக்கொடுத்தார்.

கட்சியில் சேர்ந்த  இரண்டாம் நளே விலகும் விநோதம் அங்கே நடந்தது. அது மட்டுமல்ல… தான் ராஜினாமா செய்ததற்கான சான்று வேண்டும் என்று கேட்டார் ஜெயா சக்ரவர்த்தி!

“அப்படி ஏதும் வழக்கமில்லை..” என்று மாநிலத்தலைவர் மறுக்க…   அரை மனதுடன் திரும்பிச்சென்றார் ஜெயா சக்ரவர்த்தி.

பிறகுதான் இன்னொரு தகவல் கசிந்தது..

தனக்கு மும்பை சென்சார் போர்டு உறுப்பினர் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெயா சக்ரவர்த்தி. அது நடக்கவில்லை. ஆகவே காங்கிரஸ் கட்சியை மிரட்டும் முகமாக, மேனகா கட்சியில் இணைந்திருக்கிறார்!

தர்மேந்திரா – ஹேமமாலினி

மருமகன் வீட்டில் வருமானவரி ரெய்டு என்றதும், பதறிப்போய் ராஜினாமா செய்துவிட்டார். ரெய்டு புஸ் ஆகியது.

அது மட்டுமல்ல… இந்தக் கூத்துக்கள் எல்லாம் நடந்து முடிந்த அடுத்த வாரம் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது:

“பிரபல நாட்டிய தாரகை ஜெயா சக்ரவர்த்தி  மும்பை சென்சார் போர்டு உறுப்பினர் ஆனார்.”

இது எப்படி இருக்கு?!