டெல்லி
பிரதமர் மோடி வங்கிகள் முலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம்,
பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வங்கி முறையை சீரழிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை எனக் கூறி, பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் கோடி பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மாதாந்திர சராசரி இருப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதை பாஜக அரசு 2016 இல் மீண்டும் வசூலிக்கத் துவங்கியது. மேலும் ஏடிஎம் மற்றும் வங்கியில் இருந்து சொந்தப் பணத்தை எடுக்கவும், டெபாசிட் செய்யவும் வரி விதிக்கப்படுகிறது.
விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யாமல் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பெரும் தொழிலதிபர்களின் ரூ.19 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. வங்கிகளால் பொதுமக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களின் பணத்தை வங்கிகள் மூலம் பிரதமர் மோடி கொள்ளையடித்துவிட்டார். மக்கள் தேர்தலில் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள் ”
என்று கூறியுள்ளார்.