சபரிமலை சீசன் காலத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.45 கோடி வருவாய் கிடைத்துள்ள்து. இந்த வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் மகரவிளக்கு விழா கொண்டாடப்படும். இந்த விழாக்களில் பங்கேற்று சாமி தரிசம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

KSRTC

அதன்படி சபரிமலைக்கு வரும் பக்தர்களால் உண்டியல் வருவாய், அப்பம் அரவணை விற்பனை, வாகன போக்குவரத்து என கேரள அரசிற்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான சர்ச்சை எழுந்ததால் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். ஓரிரு இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான சபரிமலை வருவாய் குறைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த சபரிமலை வருமானம் ரூ.263 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.168 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.95கோடி குறைவாகும்.

சபரி மலை கோவிலின் வருவாய் குறைந்தாலும் கேரள அரசின் போக்குவரத்துக்கழகம் கணிசமான லாபத்தை ஈட்டி உள்ளது. சபரிமலை சர்ச்சையால் வெடித்த போராட்டத்தின் காரணமாக பக்தர்கள் நிலக்கலில் இருந்து பம்பைக்கு அரசுப்பேருந்து மூலமாக செல்ல உத்தரவிடப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கேரள அரசு பேருந்துகளில் பயணித்தனர்.

இதற்காக கேரள அரசு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு தினமும் 99 சாதாரண பேருந்துகளையு, 44 ஏசி பேருந்துகளையும் இயக்கியது. இதன் மூலம் கேரள அரசிற்கு ரூ.45 கோடியே 2லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலை சீசன் காலத்தில் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.15.2 கோடி வருவாய் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு இதே வருவாய் 3 மடங்காக உயர்ந்து ரூ.45 கோடியே 2 லட்சமாக உள்ளது என அம்மாநில அரசின் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் டோமின் தச்சங்கிரி கூறியுள்ளார்.