திருவனந்தபுரம்

கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி விட்டது திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மூன்றாம் அலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது  மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மருந்துகளை மொத்தமாக வாங்கி மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.   இதில் கோவிஷீல்ட் மருந்துக்கு இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 84 நாட்கள் இடைவெளியில் கொரோனா தடுப்பூசிகள் போடும் போது அதன் திறன் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ஆயினும் 84 நாட்கள் தாண்டிய பிறகும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகப்  பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.   மேலும் கொரோனா மூன்றாம் அலை விரைவில் தாக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி இந்த இடைவெளியைக் குறைக்க உத்தரவிடுமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கொச்சியை சேர்ந்த கிடெக்ஸ் கார்மெண்ட் லிமிடெட் என்னும் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 84 நாட்கள் இடைவெளிக்குள் தடுப்பூசி போட அனுமதிக்க இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுரேஷ் குமார், “மத்திய அரசு இவ்வாறு 84 நாட்கள் இடைவெளி அறிவித்தது திறனுக்காகவா அல்லது தட்டுப்பாடு காரணமாகவா?   தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் என்பதால் இந்த இடைவெளி அறிவிக்கப்பட்டிருந்தால் இரண்டாம் டொஸ் தடுப்பூசி மருந்தை விலைக்கு வாங்க எண்ணுவோருக்கு அனுமதி ஏன் அளிக்கக் கூடாது.?” எனக் கேள்வி எழுப்பியது

இதற்குக் கேரள அரசு தங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை அளிப்பதால் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையின்படி 84 நாட்கள் இடைவெளியை தங்களால் மாற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளது.   இந்த இடைவெளி எதற்கு எனப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.