திருவனந்தபுரம்

கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு வாகன உரிம மாற்றத்துக்கு ஆதார் கட்டாயமா என விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

குடும்ப தகராறு காரணமாக கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் தனது கணவருக்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்

”எனது ஒப்புதல் இன்றி, எனது பேரில் உள்ள வாகனத்தை எனது கணவர் அவரது பெயருக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார். மேலும் 1989-ம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகனங்களின் உரிமை மாற்றத்திற்குப் படிவம் எண் 29, 30 ஆகியவற்றில் எனது கையெழுத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.

ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது மனுவில், வாகன பதிவு இணையதளத்தில் வானங்களின் உரிமம் மாற்றத்தை உண்மையான உரிமையாளர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு எளிதாக மாற்றும் வசதி உள்ளது. எனவே வாகனங்களின் உரிமம் மாற்றத்திற்கு ஆதாரை கட்டாயப்படுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்க முடியும்.”

எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி புருஷோத்தமன் மத்திய, மாநில போக்குவரத்து ஆணையர், மண்டல போக்குவரத்து அதிகாரி ஆகியோரின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மனு அளித்த பெண்ணின் கணவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.