த்துவா

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் பிணத்தை புதைக்க நிலம் அளிக்க இந்துக்கள் மறுத்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே மோதல்கள் பல வருடங்களாக நிகழ்ந்து வருகின்றது.     காஷ்மீர் பண்டிட்டுக்கள் இஸ்லாமியர் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்த் விரட்டி அடிக்கப்பட்டனர்.   அதே போல இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் விரட்டி அடிக்கப்பட்டு வருகின்றனர்.   அவ்வாறு நிகழ்ந்தது தான் இந்த கத்துவா மாநிலக் கலவரங்களும்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் உள்ளது ரசனா என்னும் ஒரு சிறு கிராமம்.   இந்த கிராமத்தில் 40 ஆண்டுகளாக இந்துக்களுக்கும் அங்கு வசித்து வரும் இஸ்லாமிய நாடோடி வம்சத்தினரான பகர்வால் இனத்தவருக்கும் மோதல் நிலவி வருகிறது.

அங்குள்ள இந்து இளைஞர்கள் பகர்வால் இனத்துப் பெண்களிடம் தவறாக நடப்பதும்  அவர்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும்  போது குடங்களை பிடுங்கி உடைப்பதும் சகஜமான நிகழ்வுகள் என பகர்வால் இனத்தவர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் பகர்வால் இனத்தவர் இந்துக்களின் நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்ட திட்டம் இட்டதாகவும் தங்கள் விளை நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதாகவும் இந்துக்கள்  புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் பகர்வால் இனத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார்.   அதன் பிறகு அந்தச் சிறுமி பிணமாகக் கிடைத்தார்.   அவரை மயக்க மருந்து கொடுத்து பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இறந்த சிறுமியின் பாட்டி, “எனது பேத்தியின் உடல் கிடைத்த அன்று கிராமத்தில் உள்ள சில இந்துக்கள் அந்த உடலை எங்கள் மயானத்தில் புதைக்கக் கூடாது என தடுத்தனர்.   பல வருடங்களாக நாங்கள் அங்கு இறந்தவர்களின் உடலை புதைத்து வருகிறோம்.   நாங்கள் பல மணி நேரம் காத்திருந்தும் பயன் இல்லை.  அதன் பிறகு இரவு நேரத்தில் எனது பேத்தியின் உடலை கிராமத்தின் மற்றொரு பகுதியில் புதைத்தோம்”  என கண்ணீருடன் கூறி உள்ளார்.

ஆனால் அதை இந்துக்கள் மறுத்துள்ளனர்.   அந்த இடம் ஒரு தனியாருக்கு சொந்தமான இடம் எனவும் மற்றும் அதை மயானமாக உபயோகிக்கக் கூடாது என ஏற்கனவே சர்ச்சைகள் எழுந்தாதாகவும் கூறி உள்ளனர்.   மேலும் அவர்கள் தான் அந்த சிறுமியின் உடலை புதைக்க மற்றொரு இடம் ஏற்பாடு செய்து தந்ததாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் கொலைக்குப் பின்னர் இரு தரப்பிலும் மேலும் தகராறு வலுக்கத் தொடங்கி உள்ளது.   சில தினங்களில் ‘இந்து ஏக்தா மன்ச்’  என்னும் அமைப்பு தொடங்கப் படது.    அது இந்துக்களின் ஒற்றுமைக்காக  பாடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டது.

பகர்வால் இனத்தவர் மசூதி ஒன்றைக் கட்ட திட்டமிடுவதால் அவர்களை விரட்டி அடிக்கவே இந்த கொடூர பலாத்காரக் கொலைத் திட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.   கொலைத் திட்டத்தை அமைத்த ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.   அத்துடன் இந்த பலாத்காரம் மற்றும் கொலையில் ஈடுபட்டதாக கைதுகள் தொடர்ந்தன.

இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இந்து ஏக்தா மன்ச் அமைப்பினருக்கு ஆளும் பாஜகவினரே ஆதரவளித்தது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.