கரூர்: கரூர் சம்பவம்  தொடர்பாக  வதந்தி பரப்பியதாக  3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும்  25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கரூர் சம்பவத்தில் திமுக அரசுமீது வதந்தி பரபப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், தவெகக்கு எதிரான போஸ்டர்களை திமுகவினர் ஒட்டச்சொன்னதாகவும் வீடியோ வெளியானது. இதனால், இந்த சம்பவத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை இல்லாதவாறு, சம்பவம் நடந்த நாளே ஓய்வுபெற்றநீதிபதியின்  விசாரணை கமிஷன் அமைப்பு , அதைத்தொடர்ந்து அடுத்த நாளே ஒய்வுபெற்ற நீதிபதியின் ஸ்பாட்  விசாரணை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில்,   த.வெ.க. பிரச்சார கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த சகாயம், த.வெ.க. நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்றனர். இன்று கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. மேலும் பல வீடியோக்களும் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து,  கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது என தெரிவித்துள்ள காவல்துறையினர்,  பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.