சென்னை

நேற்று நடந்த திமுக பவள்விழாவில் கருணாநிதி எ ஐ தொழில்நுட்பம் மூலம் தோன்றி உரையாற்றி உள்ளார்.

நேற்று தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்.

விழா தொடங்கியதும் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி தனக்கே உண்டான பாணியில் மஞ்சள் துண்டு தோளில் போட்டவாறு, கண்ணாடி அணிந்தவாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தோன்றி முதல் வரிசையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தது கண்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

கருணாநிதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம்,

”தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டிக்காக்கப்பட்ட இனமான உறவகத்தை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக கழகத்தை ஆட்சி பொறுப்பில் அமரச்செய்திருக்கும் தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி, எண்ணி என்னுடைய நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். கழக களப்பணியில் 55 ஆண்டுகளாய் அயராது உழைக்கிறவர்.

திராவிட செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்-அமைச்சராய், நல்லுலகம் போற்றும் நாயகராய் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி இவற்றின் பாதையில் கழக ஆட்சியை அவர் மிகச்சிறப்பாக வழிநடத்துகிறார். இனமானம், மொழிமானம், சுயமரியாதையை கண் போல் காக்கும் அவரது கடமை உணர்வை கண்டு நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ். ஓங்குக திராவிட மாடல் அரசு.”

என்று பேசி உள்ளார்.