கருணாநிதியுடன் பாண்டியன்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பாண்டியன் லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்   இன்று பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு காவல்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

“’தி.மு.க ஆட்சி காலத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், கணேசன், விநோதன் ஆகியோர், முகப்பேர் வீட்டு வசதி வாரியத்தில் தலா 2  கிரவுண்டு இடத்தை குறைந்த விலைக்கு வாங்கினர். அதை அதிக விலைக்கு தனியாருக்கு விற்றனர். இது  வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பானதாகும்.

இந்த விவகாரத்தில் ஒவ்வொரு அதிகாரியும் தலா 19 லட்சம் வீதம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர். இதனால், வாரியத்துக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.

கடந்த 1.3.12 அன்று, இவர்கள் மூன்று பேர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்கணிப்புத் துறையால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூவரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இப்போது, டி.எஸ்.பி- யாக இருக்கும் பாண்டியன் இன்று ஓய்வுபெற இருந்த நிலையில், அவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டது.