சென்னை,

ஜூன் 3ந்தேதி நடைபெற்ற இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற 60 ஆண்டுகால வைரவிழாவில், அவர் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி இந்த ஆண்டுடன் 60 வருடங்கள் நிறைவடைகின்றன. அதைக் கொண்டாடும் வகையில், தி.மு.க சார்பில் வைரவிழா நடத்தப்பட இருக்கிறது.

இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி, மருத்துவர்கள் அனுமதித்தால் விழாவில் கலந்துகொள்வார் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் கலந்துகொள்வது சந்தேகம் என்று கூறியுள்ளார்.

இந்த வைர விழா நிகழ்ச்சியில் அகில காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். மேலும்,  பிகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட வடமாநில தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சட்டமன்ற 60ம் ஆண்டு வைர விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ‘உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கருணாநிதி வைரவிழாவில் பங்கேற்கவில்லை’ என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், ‘மருத்துவர்கள் அனுமதித்தால் மட்டுமே கருணாநிதி பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்று ஸ்டாலின் தெரிவித்திருப்பது கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.