கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 6

பா. தேவிமயில் குமார்

முகமூடி

இங்கு போல
அங்கு வாயாடாதே !

அவனுக்குப் பிடித்த
ஆரஞ்சு நிறத்தை அடிக்கடி உடுத்திடு !

அவனுக்கு கடவுள் பிடிக்காதாம்
ஆனால் நீ கும்பிட அனுமதி உண்டாம் !

டிகிரி காபி ரொம்ப பிடிக்குமாம்
தினமும் போட்டுப் பழகிடு !

அவன் அப்படி, இப்படி இருந்தால்
அனுசரித்துப் போயிடு !

உன் அறிவாளித்தனத்தை தூரம் வை,
எதுவும் தெரியாதது போல இருந்திடு !

குழம்பு வைக்க, கோலம் போட
கணவன் மகிழ, கச்சிதமாய்
நடந்திடக் கற்றுக்கொள் !

அசாத்திய தைரியத்துடன் வளர்த்து விட்டோம்,
ஆனாலும் அவனுக்கு அடங்கியேப்போ !

என வண்டி வண்டியாய்
அறிவுரைகள் கொட்டப்பட்டது
என் தலையில் !

அவனுக்கு எந்த
அறிவுரையும் தேவை இல்லையாம்,
ஏனென்றால் அவன் “ஆம்பளையாம்”

அவன் அவனாகவே
இருந்திடுவானாம்,
நான் மட்டுமே
மாறுவதுதான் மரபாம் !

இருவர் சேர்ந்தது தான் திருமணம்
ஆனால் எனக்கு மட்டுமே
கட்டு பாடுகளும்
கட்டளைகளையும்

இரு வீட்டிலும
ஏராளமாய் …..,.
தாராளமாய்
தருகிறார்கள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
ஏதோ ஒரு காரணம் காட்டி
கொட்டிலில் அடைத்து விடுவீர்கள் !

எப்போதும் ஏதோ ஒரு காரணம்
இப்போது கிடைத்தது, திருமணம் !

இவ்வளவு முகமூடிகளையும்
எடுத்துக் கொண்டேன், வேறென்ன ?
என் முகத்தை மறந்து போனேன்
இவ்வளவுக்குப் பிறகான
பட்டம்தான் “திருமதி”