கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 2

பா. தேவிமயில் குமார்

1. கவலை

பிள்ளைகளின்
பார்வையில் படாமல், தம்
காதல் கடிதங்களை
ஒளித்திடும் போதுதான்,
பருவகால காதலின்
பயம் வருகிறது
பெற்றவர்களுக்கு !

2. தொலைந்திடு

காதலில்
தொலைந்திடு
காதலை
தொலைத்திடாமல் !

3. ஒயின்

இருவரின்
இதழ்பட்டவுடன்
ஒரு கோப்பை நீர்
ஒயின் ஆனது !
வா, போகலாம்,
மதுபானச் சாலைக்கு
ஆள் எடுக்கிறார்களாம் !

4. அன்றாடம்

கஞ்சிக்குப் பணமில்லை
குடிக்கப் பணம் ஏது ? என
அம்மா சண்டையிடுவது
அன்றாடங் காட்சியானது !
அன்றாடங் காய்ச்சியின் வீட்டில் !

5. குடி

குடி, குடியைக் கெடுக்கும்
குடி(சை)யே இல்லாதவனின்
குடியையும் கெடுக்கும் !