கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 1

பா. தேவிமயில் குமார்

1. தேடல்

இந்தியா சார்பில்
தங்கப்பதக்கம்
தட்டியதொரு
தங்கம்….
இணையத்தில்
தேடப்பட்டது
அவர்…..
எந்த சாதி என !

2. முரண்

தீராத பசியால்
தவித்தவன்
தீர்ந்து விடுமோ
தன் சுவாசம் என
திணறுகிறான் !

3. வீடு

மகன் கட்டிய
மணல் வீட்டை
மகிழ்ச்சியுடன்
பார்க்கிறாள்
பாதையோரம்
வசிக்கும் தாய் !

4. யார் ?

காதலை நிரப்பி
கவிதைகளை
எழுதினாலும்
கண்ணீரை நிரப்பி
கதைகளைக்
கொடுத்தாலும்
எழுதியது
ஆணா ? பெண்ணா ?
என முதலில்
ஏறிட்டுப் பார்க்கிறது
இந்த சமூகம் !

5. காயம்

ஜன்னல் காற்றில்
அவளுக்கானக்
கனவுகளை
கண்டு கொண்டாள் !
அடக்குமுறையால்
வாசல் வழியே
வெளியே சென்றது
கனவுகள்….
காயங்களோடு !