கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 10

பா. தேவிமயில் குமார்

உன்னை விரும்புகிறேன்…..

மனம் விட்டுப்
பேச நினைத்தேன்
மனதை
உன்னிடம்
விட்டதை அறியாமலே !

உன்னைப் பார்க்க
வேண்டாமென
எட்டி நடந்தேன் !
எட்டிப் பார்க்கிறேன்
என்னைப் பார்க்கிறாயா ?
என…..

அங்குசத்தைக் காணும்
களிறாய் காதல் எண்ணங்கள் !

பூத்திடலாமா ? வேண்டாமா ?
புரியாத நிலையில் மொட்டுக்கள் !

பூக்கோலமா ? சிக்குக் கோலமா ? என
புள்ளி வைத்த பின் சிந்தனை !

அலையின் அரவணைப்பை
ஊடலென எண்ணிடும்
பாறைகள் !

எட்டிப்பார்க்கும் காதல்
எண்ணங்களை எந்த
மூட்டையில் கட்டுவது ?

ஏதேதோ வேலைகள்
எக்கச் சக்கமாய்,
ஆனாலும்,
அலாரம் போல
ஆழ்மனதில் உன் ஓசை !

பைத்தியக்காரத்தனத்தின்
மறு பதிவே காதல்
மறுபடி, மறுபடி
சிந்தனை !
முடிவில்லா எல்லையின்
முதல் அடியே
“உன்னை விரும்புகிறேன்”