கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 8

பா. தேவிமயில் குமார்

மழைத்துளி

மின்னலை
முத்தமிட்டவாறே
மண்ணுக்கு வருகிறாய் !

துளிகளில்
தூளி கட்டி
தரை இறங்குகிறாய் !

காற்றோடு
காதல் செய்தவாறு
கரை புரள வருகிறாயோ ?

உலகை சுற்றினாலும்
உனக்குப் பிடித்த
இடத்தில் இறங்குகிறாய் !

கருமேகத்தின்
கருவிலிருந்து வந்தாலும்
பளிச்சென இருப்பதெப்படி ?

பருவம் மாறா விருந்தினன்
ஆனாலும் திடீர் என வந்து
திக்கு முக்காட வைக்கிறாய் !

குளிரைக் கொடுத்து
கதகதப்பைத்
திருடிவிட்டாய் !

வெய்யோனுக்கு
ஓய்வளித்து விட்டோயோ ?

குடையெனும்
கிரீடத்தைக்
கொடுத்த கொடையாளி நீ !

வந்தாலும்
வராவிட்டாலும்
பேசுபொருள் நீ !

உனக்கும்
குளிருமல்லவா ?
வா தேநீர் தருகிறேன் !
உன்னால் பிழைத்த
என் வீட்டு ரோஜாவுடன்
அருந்தி மகிழலாம் !