மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வு மே 8ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வார்கள். இதையடுத்து வைகை ஆற்றில் தண்ணீர் வரும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்படி, மே 8ந்தேதி அன்று தண்ணீர் திறக்கப்படும் என்றும், திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் நீராடும் வகையில், மதுரை வைகை ஆற்றல் தண்ணீர் வரும் வகையில், வைகை அணையில் 4 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 55.76 அடி நீர் மட்டம் உள்ளது. வைகை அணையின் மொத்த கொள் அளவு 71 அடி. தற்போது அணைக்கு 114 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2842 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
அதுபோல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. அணையில் 1585 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 39.20 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. போடியில் மட்டும் 21.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.