சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய  உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என தகது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி மற்றும் காவல்துறையின் நடவடிக்கை காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், துணை பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 அத்துடன் தவெக நிர்வாகிகளான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகியான மாசி பவுன்ராஜ், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரான வெங்கடேஷ், திண்டுக்கல் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் , விஜய் தரப்பை கடுமையாக விமர்சித்ததுடன், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார். இந்த விசாரணையும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிராக தவெக தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தது. அப்போது காவல்துறையின் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து,
 அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இந்த வழக்கை உச்ச நீதிமன்ற மேற்பார்வையுடன் கூடிய தமிழக போலீசார் அல்லாத நடுநிலை தரப்பு விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தனர். அதேவேளை, தற்போதைய விசாரணை போதும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற கருத்தை தமிழ்நாடு அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அறிவித்தது, அதன்படி இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தமிழ்நாட்டைச் சாராத 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய நீதி என்ற தவெக தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் வலைத்தளத்தில் “நீதி வெல்லும்” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில் தங்கள் தரப்பில் ஒரு தவறும் செய்யவில்லை உண்ணை ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும் எனக் கூறியிருந்தார். அத்துடன் என்னை பழிவாங்குங்கள், என் கட்சியினரை பழிவாங்க வேண்டாம் என்று முதலமைச்சரை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதேபோல, இன்றைய தீர்ப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா தனது பதிவில், “கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்!” எனப் பதிவிட்டுள்ளார்.