கொல்கத்தா:
தனது இடமாற்ற உத்தரவு தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடவுள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். தனது பணியிடமாற்ற உத்தரவு தொடர்பாக இவர் வரும் பிப்ரவரி 13ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாட இருக்கிறார். இதற்கான அனுமதியை அவர் சுப்ரீம்கோர்ட்டில் பெற்றுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, கொல்கத்தா உயர்நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவரது இடமாற்ற உத்தரவை இவரே முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் இவருக்கு வழக்குகளை ஒதுக்க வேண்டாம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அவரது இடமாற்ற உத்தரவு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கும், உத்தரவுக்கும் சுப்ரீம்கோர்ட் தடை விதித்தது.

இந்த உத்தரவுக்கே தடை விதித்து நீதிபதி கர்ணன் மேலும் ஒரு அதிரடியை மேற்கொண்டு, சுப்ரீம் கோர்ட்டின் கோபத்திற்கு ஆளானவர். இவர் மீது 12க்கும் மேற்பட்ட புகார்களை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுப்ரீம்கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தது. இதன் மீது கர்ணன் தனது தரப்பு கருத்துகளை அனுப்ப சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு தான் வரும் பிப்ரவரி 13ம் தேதி விசாரணைக் வர இருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் தனது சொந்த வழக்குக்காக உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும் ஒரு சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுவது இதுவே முதன்முறை என்று வக்கீல்கள் கூறுகின்றனர்.