பாட்னா :

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

பீகாரில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற மேவாலால் சவுதாரி மீது ஊழல் புகார்களை தேஜஸ்வி கூறியதால், பதவி ஏற்ற மூன்றே நாட்களில் சவுதாரி ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதனால் தேஜஸ்வி மீது முதல்- அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கோபத்தில் உள்ளது.

பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் நாராயண் சிங் நேற்று பேட்டி அளித்தபோது, தேஜஸ்வி மீது அடுக்கடுக்கான புகார்களை அடுக்கினார்.

“தேஜஸ்வி மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனை மனு தாக்கலின் போது அளித்த ‘அபிடவிட்டில்’ தேஜஸ்வி குறிப்பிடவில்லை” என நாராயண் சிங் குற்றம் சாட்டினார்.

“ஊழல் வழக்குகளும் தேஜஸ்வி மீது உள்ளன. எனவே அவர் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்க கூடாது” என்றும் நாராயண சிங் தெரிவித்தார்.

– பா. பாரதி