மும்பை: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் செயலாளராக இருந்து வருபவர், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா. 24 உறுப்பு நாடுகளை கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹுசைனின் பதவிக்காலம் முடிவடைந்தது.

இதையடுத்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அா்ஜுன் துமல்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய் ஷாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு வாழ்த்துகள். ஜெய் ஷா தலைமையின் கீழ் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மிகப்பெரிய வளா்ச்சி பெறும். இதனால் ஆசியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரா்களும் பயன் பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.