டோக்கியோ: ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிழக்கு, மத்திய ஜப்பான் பகுதிகளில் 7 மாகாணங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்படுவதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த அவசரநிலை, அடுத்த மாதம் 7ம் தேதி வரை தொடரும். அவசர நிலையின் போது உணவகங்கள், மதுபான விடுதிகள் ஆகியவை 8 மணிக்கு மூடப்படும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுவா். பொது இடங்களில் மக்கள் கூட்டமாக செல்வதற்கும் தடை விதிக்கப்படும். திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கலையரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்க அதன் நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த 7ம் தேதி முதல் டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாகாணங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.