டில்லி

போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையும், டில்லி காவல்துறையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டில்லி சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

நேற்று அதிகாலை விமானம் மூலம் ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென் மண்டல அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

நாளிரவு வரை இந்த விசாரணை நடைபெற்றது  அப்போது ஜாபர் சாதிக் வைத்திருந்த 7 செல்போன்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து நீண்ட விசாரணை நடந்ததாகவும் தெரிகிறது. அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்களுடன் அவருக்கு இந்த தொடர்பு குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

இன்றுடன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் காவல்துறை காவல் முடிவடைந்த நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்னிறுத்தப்பட்டார். ஜாபர் சாதிக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டுள்ளார்.