டெல்லி

ஸ்ரோ 2 செயற்கை கோள்களை விண்வெளியில் இணைத்து சாதனை புரிந்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கொண்டுள்ள இந்தியா மேலும் விண்வெளியில் தனக்கென சொந்தமாக பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் (பி.ஏ.எஸ்.) எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது. வருகிற 2035-ம் ஆண்டுக்குள்  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இதை விண்வெளியில் நிறுவ பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இது போன்ற விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – ஸ்பேஸ் டாகிங் எக்ஸ்பிரிமென்ட்) எனும் நுட்பத்தின் கீழ் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனைகளில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

கடந்த டிசம்பர் 30-ந் தேதி இஸ்ரோ இதற்காக 2 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி அவற்றின் சுற்றுவட்டப்பாதை இடைவெளிகளை சிறிது சிறிதாக குறைத்து ஜனவரி 16-ந் தேதி 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.

இஸ்ரோ நிறுவனம், நேற்று 2-வது முறையாக ஸ்பேடாக்கிங் முறையில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது தொடர்பாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், “இஸ்ரோ 2-வது ஸ்பேடாக்கிங் முறையில் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக இணைத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி உள்ளார்.