கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ.  உளவுத்துறை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

என்ன அறிவிப்பு?

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைக் கண்டறியும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையை ஈடுபடுத்தப்போகிறாராம்.

பாகிஸ்தானில் கொரோனாவுக்கு இதுவரை 230 பேர் உயிர் இழந்துள்ளனர்.

10 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா செலவினங்களுக்கு நிதி திரட்ட பாகிஸ்தான் அரசும், சில தொலைக்காட்சிகளும் இணைந்து நேற்று நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தின.

இதில் அந்த நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் உள்ள பாகிஸ்தான், மக்களுடன்   அவர் தொலைப்பேசியில் உரையாடினார்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ‘ஜாலி’யாக பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது கோடிக்கணக்கில் கொரோனா நிவாரண நிதி குவிந்தது.

அப்போது பேசிய இம்ரான்கான்’’ தீவிரவாதிகளை பிடிப்பதற்குத்தான் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ் ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தோம். இப்போது கொரோனா நோயாளிகளைக் கண்டறிய ஐ.எஸ்.ஐ.(தொழில்நுட்பம்) பயன்படுத்தப்படும்.’’ என்று அறிவித்தார்.

‘ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தும் தொழில் நுட்பம் மூலம் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  பின்னர் தனிமைப் படுத்தப்படுவார்கள்’’ என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டார்..

– ஏழும்லை வெங்கடேசன்