சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.200 ரூபாயில் அதிவேகம் கொண்ட இண்டர் இணைப்பு  வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் அமைச்சர் பிடிஆர் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன்,  தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக வீடுகளில் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் இண்டர்நெட் இணைப்பு வழங்க இருப்பதாகவும்,  4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இண்டர்நெட் வகதி வேண்டும் என விண்ணப்பம் வந்துள்ளது. அந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் இடங்கள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இன்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து அதன் மூலமாக வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

இதேபோல் இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிடிஆர் கூறினார்.

அதேநேரம் 200 ரூபாய் இணைய சேவை திட்டம் சிறப்பானது என்றாலும், தொழில்நுட்ப பிரச்சனைகள் இல்லாத அளவிற்கு அரசு சேவைகளை மேம்படுத்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் மாதம் இணைய சேவை பெற ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது  600 ரூபாய் முதல் 1200 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அந்த சேவையும் பல்வேறு கிராமங்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை.. பல கிராமங்களுக்கு இணைய சேவை அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி போன தனியாரிடம் தாரைவார்த்து இந்த திட்டத்தை சீர்குலைத்து விடக்கூடாது என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.