புதுடெல்லி:
நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, சுமார் 37.57 கோடி (37,57,10,173) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 34 லட்சம் (34,01,696) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் 15,72,451 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,74,472 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர்,

37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 11,16,46,378 பேர் முதல் டோசையும், 36,93,265 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவனருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், கேரளம், தெலங்கானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 6225332 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 202804 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 207835 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 952 பேர் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.