டெல்லி: வன்முறை களமாக மாறியுள்ள வங்கதேசத்தில் செயல்பட்டு வந்த விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக மத்தியஅரசு  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 33 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்து. இஇதைத்தொடர்ந்து,   ஷேக் ஹசீனா அரசுக்கெதிராக தேசிய அளவில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்ததால், நாடு முழுவதும் வன்முறை  தாண்டவமாடியது. மேலும் அங்கு சிறுபாண்மையினராக வாழ்ந்து வந்த இந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்துகோயில்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து,  பிரதமர்  ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு ராணுவம் அரசு அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அங்கு செயல்பட்டு வந்த இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக  இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முன்னதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா   கூறும்போது, “வங்கதேசத்தின் தீஸ்தா நதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது. எனினும் இந்த திட்டப்பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படும் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சீனா முடிவு செய்தது. இதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் அந்த நாடு ரகசியமாக கைகோத்தது. வங்கதேசத்தில் ஐஎஸ்ஐ உளவாளிகள் ஊடுருவிகலவரத்தை தூண்ட, அதற்கு தேவையான நிதியை சீனா தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதன் விளைவே வங்கதேசம் பற்றி  எரிய காரணம் என்ற கூறப்படுகிறது.

இதை உறுதி செய்துள்ளது இந்திய உளவுத் துறை. மேலும், இது தொடர்பான பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.  வங்கதேசத்தில் ஜமாத் – இ – இஸ்லாமி என்ற பழமைவாத அமைப்பு செயல்படுகிறது. இதன் மாணவர் பிரிவான இஸ்லாமி சத்ரஷிபிரை சேர்ந்த மாணவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பயிற்சிகளை வழங்கியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள முகாம்களில் இவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.

ஐஎஸ்ஐ அமைப்பால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட இவர்கள், வங்கதேச மாணவர் சங்க போராட்டத்தை கலவரமாக மாற்றி, பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதற்காக ஐஎஸ்ஐ அமைப்புக்கு சீனா பெரும் தொகையை வழங்கியிருக்கிறது.  வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி-யின் தலைவர் தாரிக் ரகுமான், பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கிறார். இவரும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மூத்த தலைவர் ஜாவித்தும் அண்மையில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சந்தித்தனர். அப்போது ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டது.

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் அண்மையில் 10 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் இஸ்லாமி சத்ரஷிபிர் அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அனுப்பப்பட்டவை ஆகும். இதன் பின்னணியில் தாரிக் ரகுமானும் தாவூத் இப்ராஹிமும் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சி போன்று வங்கதேசத்தில் முஸ்லிம் பழமைவாத ஆட்சியை ஏற்படுத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிர முயற்சி செய்து வருகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் நிலவும் ‘நிலையற்ற சூழ்நிலை’ காரணமாக அனைத்து இந்திய விசா விண்ணப்ப மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.