வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு  இறுதியில் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நிக்கி ஹாலே போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியில் மீண்டும் தானே போட்டியிடப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தன்னை களமிறக்க வேண்டும் என இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே போர்க்கொடி தூக்கி இருக்கிறார். இவர் தெற்கு கரோலினா மாகாணத்தில் ஆளுநராகவும், ஐநா அமெரிக்க தூதராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

அமெரிக்காவில் பிரதான கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டு அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

இந்த நிலையில், ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் அதிபர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதால், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டி என அறிவித்துள்ள நிலையில் இப்போது நிக்கியும் களத்தில் குதித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நிக்கி, “நான் நிக்கி ஹேலே. நான் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டின் நிதிப் பொறுப்பை மீட்டெடுக்கவும், நமது எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, நமது பெருமை மற்றும் நமது நோக்கத்தை வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமை தேவைப்படும் நேரம் இது” என்று பேசியுள்ளார்.

தற்போது, 51 வயதாகும் நிக்கி ஹேலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அஜித் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். முதலில் கனடாவில் குடியேறிய அஜித் சிங் அதன்பின் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதே தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தனது 39 வயதில் பதவியேற்று அமெரிக்காவின் இளம் ஆளுநர் என்ற சாதனையை கடந்த 2011ல் படைத்தார் நிக்கி ஹேலே. இரு முறை இம்மாகாண சிறப்பாக செயல்பட்ட நிக்கி, டிரம்ப் அதிபராக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை ஐநா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.