டில்லி
ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் ஆயதுல்லா கோமேனி டில்லி கலவரங்களுக்காக இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் சட்ட ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கலவரத்தில் 4 மசூதிகள், ஏராளமான வீடுகள், பொது மற்றும் தனியார் சொத்துக்கள் தீக்கு இரையாகின. சுமார் 50 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த வன்முறைக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டில்லி வன்முறையின் போது இந்திய முஸ்லிம்கள் அபாயத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் மிகவும் முக்கியமான தலைவரான ஆயதுல்லா கோமேனி அந்நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வெளிநாட்டு உறவு ஆகியவற்றைக் கவனித்து வருகிறார்.
ஆயதுல்லா கோமேனி நேற்று ஆங்கிலம், உருது, பாரசீகம், மற்றும் அரபி மொழியில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
“இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அழிக்கப்படுவது கண்டு உலக இஸ்லாமியர்களின் உள்ளம் துயர் அடைகிறது. இந்திய அரசு திவிரவாத இந்துக்கள், அவர்களுடைய கட்சிகள் ஆகியவற்றை எதிர் கொண்டு இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அழிக்கப்படுவதை நிறுத்தி இந்தியாவை உலக இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் ”
எனப் பதிந்துள்ளார்.