சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண்

தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக பொறுப்பு வகித்துள்ளார்.  இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த காவல் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் சீனர்.

இந்திராணி ராஜாவுக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு துறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது அமைச்சராக இவர் செயல்படுவார்.

இவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் ஆவர்.  மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சராக  நியமிக்கப்படுவார் என்றும் அதே போல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும்  தகவல் வெளியாகி உள்ளது.