டில்லி
மொபைல் எண்கள் 10 இலக்கத்திலேயே தொடரும் எனவும் சிம் கார்டு மூலம் கார், கண்காணிப்பு கேமிரா போன்ற கருவிகளை பயன்படுத்த மட்டுமே 13 இலக்க எண் தேவைப்படும் என தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று சமூக வலை தளங்களில் மொபைல் எண்கள் இனி 13 இலக்கமாக மாற்றப்படும் என தகவல் வெளியானது. இந்த எண்கள் விரைவில் அனைத்து மொபைல் எண்களுக்கும் மாற்றப்படும் என வெளியான தகவல்கள் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியது. இது குறித்து தொலை தொடர்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்க அறிவிப்பில், “இப்போது சிம் கார்டுகள் மூலம், கார், கண்காணிப்பு காமிரா, மின்னணு மீட்டர் போன்ற பல உபகரணங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எம் டு எம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான சிம் கார்டுகளின் எண்கள் மட்டுமே 13 இலக்கம் கொண்ட எண்கள் பயன்படுத்தப் பட உள்ளன. இதனால் மற்ற மொபைல்களுக்கான சிம் எண்கள் 10 இலக்கத்திலேயே தொடரும்.
இது குறித்து பி எஸ் என் எல் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. எம் டு எம் பயன்பட்டுக்கான சிம் கார்டுகளுக்கு மட்டும் வரும் ஜூலை 1 முதல் 13 இலக்க எண்கள் வழங்கப்படும். எற்கனவே வழஙக்ப்பட்டுள்ள எம் டு எம் சிம்களுக்கும் வரும் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31க்குள் 13 இலக்க எண்ணாக மாற்றப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.