டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.04 கோடியையும்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தையும் கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 வழக்குகளும், 59,384 பேர் குணமடைந்துள்ளதுடன், 853 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் இருந்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 46,617- பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 251- ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 853- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 312 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 59,384 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 302- ஆக உள்ளது.

தற்போதைய நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  34,00,76,232 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.