சென்னை: அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை (சத்திரம்) அல்ல இலங்கை தமிழர் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

“உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா தங்க வைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் , உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்கான தர்மசாலை (பொது தங்குமிடம்) இந்தியா அல்ல என்று  உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது,  அத்துடன்  நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு நிவாரணம் வழங்கவும் மறுத்துவிட்டது.

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015-ல் கைது செய்யப்பட்டார். 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறி விட்டதாகவும் கூறியுள்ள அவர், தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரயை உச்சநீதிமன்ற  நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  ‘உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி வாழ்ந்து வருகிறோம். இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என காட்டமாக கேள்வி எழுப்பியதுடன்  இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்’ என்று மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.