சேலம்: கர்நாடகாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியது.  இதன் காரணமாக காவிரி ஆறு உள்பட பல  ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை இன்று மாலை 100 அடி எட்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இரண்டு அணைகளிலும் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறது.   கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 124.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையின் நீர்மட்டம் 82.36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 769 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

இந்த இரண்டு அணைகளிலிருந்தும் மொத்தமாக 1 லட்சத்து 30,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஹேமாவதி அணையில் இருந்து 77,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 93 ஆயிரத்து 828 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் இன்று பிற்பகலுக்குள் மேட்டூர் அணை 100 அடியை எட்டும்.  மேலும்  அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அதிகாரிகள் அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  . காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் இருகரை களையும் தொட்டப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி பரிசல் துறைஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் ஆற்றில் மீன்பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கரையோர கிராமங்களில் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.