ஸ்டாக்ஹோம்

ஸ்வீடன் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்வீடன் நாடு பலவிதத்திலும் முதல் இடத்தில் உள்ளது.   இந்த நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வு கிடையாது.  இந்நாட்டின் அர்சியல் அமைப்பு சட்டம் 1766 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.   அப்போது அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஒளிவு மறைவின்றி நடக்க வேண்டும் என்பதும் ஆட்சியில் இருப்போரும் பொதுமக்களும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்பதும் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

அதை ஒட்டி அரசு அதிகாரிகள் யாருக்கும் அரசு வாகனங்கள், மற்றும் ஓட்டுனர்கள் அளிப்பது கிடையாது.    பல அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் பேருந்து, ரெயில் போன்றவைகளில் பயணம் செய்கின்றனர்.  அவர்களுக்கு என தனி இடம் ஒதுக்கப்படுவதும் கிடையாது.    உலகின் லஞ்ச ஊழல் மிக மிக குறைவாக நிகழும் நாடு என்னும் புகழை ஸ்வீடன் பெற்றுள்ளது.

அதை போலவே மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவது கிடையாது.  அதிகாரிகளைப் போலவே மக்களவை உறுப்பினர்களும் பேருந்து மற்றும் ரெயில்களில் பொதுமக்களுடன் பயணம் செய்து வருகின்றனர்.   அரசியல்வாதிகள் மக்களின் துயரங்களையும் அன்றாட பிரச்சினைகளையும் அறிந்துக் கொள்ள இவை உதவுகின்றன.

கடந்த 1990 களில் அந்நாட்டின் அப்போதைய துணைப் பிரதமர் மோனா சாலின், அரசு கடன் அட்டை  (கிரெடிட் கார்ட்) மூலம் சாக்லேட், நாப்கின்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களை வாங்கி விட்டு பிறகு பணம் அளித்தார்.  அது அந்த காலத்தில் மிகப்பெரிய ஊழலாக கருதப்பட்டு விசாரணை நடந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.