டில்லி

கொரோனா வைரசுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி உள்ளது.  இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனமும் கண்டுபிடித்து சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவி ஷீல்ட் ஆகியவை போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. தற்போது கோவிஷீல்ட், கோவாக்ஸின் மருந்துகள் முன் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.   இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுள்ள சூழலில் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசிகளை விற்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அவசரச்சூழலுக்கு ஏற்ப தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.  தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சூழலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை கூட உருவாகலாம். ஆகவே, எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் முடிவுகளை அரசு எடுக்கும்.

மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும். எனவே நாம் இரு தடுப்பூசிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்பதால், மேலும் 7 தடுப்பூசிகளை உள்நாட்டில் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  நமது நாடு மிகப்பெரிய நாடு, மக்கள் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொருவாக்கும் கிடைக்கும் வகையில் அதிகமான தடுப்பூசிகளைக் கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

தயாரிக்கப்பட உள்ள 7 தடுப்பூசிகளில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. 2 தடுப்பூசிகள் கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தையக் கட்டத்திலும், ஒரு தடுப்பூசி முதல் கட்ட கிளினிக்கல் பரிசோதனையிலும், 2-வது தடுப்பூசி 2-வது கட்டத்திலும் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.