காட்பாடி: வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், அரசு வேலை வேண்டிய மனு கொடுத்தார். அவரது மனுவை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உடனடியாக  பணி நியமன ஆணையை வழங்கினார். இது பெரும் வரவற்பை பெற்றுள்ளது.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்வரிடம்  வேலை வேண்டி கோரிக்கை அளித்தார்., அவரது மனுவில், தான் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில்  வாழ்ந்து வருவதாகவும், தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும்,  தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதை கண்ட முதல்வர் ஸ்டாலின்,  பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, முதல்வர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

 முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சியோடு, முதல்வர் ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்தார்.