டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைத்தால், மாநில வருவாய் குறையும்  என திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு  ஜிஎஸ்டி கூட்டத்தில், வரி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  ஆகஸ்டு 20ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த  கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாமானியர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சீர்திருத்தங்களில் ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும்,  ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிற்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு மேல்வரியினை மறுஉருவாக்கம் செய்வதற்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது வருமாறு:- சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும் முனைவுகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இதற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு வழிவகுக்கக்கூடாது. குறிப்பாக சமூக நலத்துறையில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம் முழு மனித ஆற்றலையும் அடைவதற்கான வழியைக் காட்டுகின்றன. எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் வரிசீரமைப்பு முனைவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கும் விதமாக அமைந்திட வேண்டும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும், தருணத்தில் இழப்பீட்டு மேல்வரியும் முடிவுக்கு வரவுள்ளது. ஒரே நேரத்தில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதக் குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரியினை நீக்குவது ஆகியன மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்.

எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகித மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டு மேல்வரியினை நீட்டிக்க வேண்டும்.

தற்போது மேல்வரி விதிக்கப்பட்டு வரும் பொருட்கள் மீது, இழப்பீட்டு மேல்வரியினை தொடர இயலாத நிலையில், மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை குறைப்பதற்கு, மாற்று வழிமுறை செய்யப்பட வேண்டு.

இழப்பீட்டு மேல்வரியினை 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு மட்டும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் உடனடி தீர்வாக மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதமாக எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உயர்த்தப்பட வேண்டும்.

மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதத்தை மறுசீரமைப்பதில் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இந்த ஆண்டு இரண்டு தீபாவளி பரிசு என்று கூறினார்.  அப்போது,    விரைவில் ஒரு புதிய எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், தீபாவளிக்கு முன்பு பெரும்பாலான விகிதக் குறைப்புக்கள் எதிர்பார்க்கப்படும் என்றும் கூறினார். “இந்த தீபாவளியை உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். உங்களுக்கு மிகப் பெரிய பரிசு கிடைக்கும்” என்று அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போதைய நான்கு அடுக்கு ஜிஎஸ்டி முறையை – 5%, 12%, 18% மற்றும் 28% – 5% மற்றும் 18% என்ற இரண்டு முதன்மை அடுக்குகளுடன் மாற்றவும், ஆடம்பர மற்றும் பாவப் பொருட்களுக்கு 40% “டிமெரிட்” விகிதத்துடன் மாற்றவும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்தால், மறுசீரமைப்பு அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மருந்துகள், விவசாய உபகரணங்கள் மற்றும் கல்விச் சேவைகளின் விலையை வெகுவாகக் குறைக்கும். தற்போது 12% வரி விதிக்கப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 99% 5% ஆகவும், சிமென்ட், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் உட்பட 28% வரி விதிக்கப்படும் பொருட்களில் சுமார் 90% 18% ஆகவும் குறையும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில்,

குறைந்த வரி விகிதங்களால் ஏற்படும் வருவாய் இழப்புகள், விரிவாக்கப்பட்ட வரி அடிப்படை, அதிக இணக்கம் மற்றும் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றால் ஈடுசெய்யப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். “இந்த சீர்திருத்தம் அத்தியாவசியப் பொருட்களை மலிவாக மாற்றும், MSME-களுக்கு அதிகாரம் அளிக்கும், மேலும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும்” என்று மோடி கூறினார், இது ஒரு மீள்தன்மை மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தீர்க்கமான படியாகும்.