நியூசிலாந்து,

19வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கான யு-19  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து இன்று இறுதிப்போட்டி தொடங்கியது.

இன்றைய இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் பங்கேற்று உள்ளன. நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில்,  இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதுபோல மற்றொரு போட்டியில்,  ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் வகையில் இன்று இறுதி போட்டி நடைபெறுகிறது.   இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் இன்றைய போட்டி நியூசிலாந்தில் உள்ள   மவுன்ட் மாங்கானுவில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஜெசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இறுதிபோட்டியில் களம் இறங்கி உள்ள இந்திய அணி வீரர்கள்: ப்ரித்வி ஷா (கேப்டன்), மஞ்சோத் கல்ரா, ஷுப்மான் கில், ஹர்விக் தேசாய் (விக்கெட்கீப்பர்), ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, அனுகுல் ராய், கமலேஷ் நகர்கோட்டி, ஷிவம் மாவி, சிவா சிங், இஷான் போரெல்

ஆஸ்திரேலியா அணி வீரரகள்: ஜாக் எட்வர்ட்ஸ், மேக்ஸ் பிரையன்ட், ஜேசன் சங்கா (கேப்டன்), ஜொனதன் மெர்லோ, பரம் உப்பால், நாதன் மெக்ஸ்வீனி, வில் சதர்லேண்ட், பாக்ஸ்டர் ஜே ஹோல்ட் (விக்கெட்கீப்பர்), ஜாக் எவான்ஸ், ரியான் ஹாட்லி, லாயிட் போப்.

பரபரப்பாக போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இதன் காரணமாக இந்தியா கோப்பையை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.