சென்னை

முன்னாள் முதல்வர் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தாம் ஒரு தபால்காரர் போல் செயல்பட மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த புகாரை ஒட்டி தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்தது. அந்த விவரங்கள் குறித்து ஆறுமுகசாமி பல வினாக்கள் எழுப்பினார்.

இது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை விவரங்கள் தெளிவாக உள்ளதாகவும் அதில் மேற்கொண்டு வினா எழுப்பக் கூடாது என தெரிவித்தது. இந்த மனுவின் விசாரணையின் போது ஆறுமுகசாமி, “ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த விவரங்களை அப்பல்லோ மருத்துவமனியிடம் இருந்து பெற்று அதை அப்படியே அரசிடம் அளிக்க நான் தபால்காரர் இல்லை.

தற்போதுள்ள நிலையில் ஜெயலலிதாவின் மரணம் சரியான சிகிச்சைக்கு பிறகும் நடந்ததா என்பதை ஆராய்வதில் ஆணையத்துக்கு முழு பொறுப்பு உள்ளது. ஆகாவே அந்த சிகிச்சை விவரங்கள் சரியானதா என்பதை ஆராய்வது ஆணையத்தின் கடமை ஆகும். மருத்துவமனை அளிக்கும் விவரங்களை அப்படியே அரசுக்கு அளிக்க ஆணையம் தபால்நிலையம் இல்லை. இந்த விவரங்களை ஆராய்வதன் மூலம் அது அப்பலோ மருத்துவமனைக்கு சாதகமாகவும் அமையலாம்” என தனது வாதத்தில் தெரிவித்தார்.

அவருடைய வாதத்துக்கு அரசு வழக்கறிஞர் சுந்தரேசன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது வாதத்தில் அப்பல்லோ மருத்துவமனை மீது ஆறுமுகசாமிக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித தகராறும் கிடையாது. அவருடைய விசாரணைக்கு மருத்துவமனை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதை விடுத்து ஆணையத்துக்கு எதிராக மனு அளிப்பது தவறான நடவடிக்கையாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்த வாதத்துக்கு பிறகு உயர்நீதிமன்றம் இந்த வழாக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை ஒத்தி வைத்தது.