பெங்களூரு

காங்கி்ரஸ் தலைவர் சித்தராமையா தாம் அடுத்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என முன்பு கூறியதை உறுதிப்படுத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மஜத – காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைச்சரவையை உடைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு 20 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேர தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா மீண்டும் முதல்வராக உள்ளதாக ஒரு சிலர் தெரிவித்தனர். இது குறித்து சித்தராமையா, “நான் அடுத்த முதல்வராக பதவி ஏற்பேன் என்பது மிகவும் தவறான செய்தியாகும். தற்போது முதல்வர் பதவி காலியாக இல்லை. எனவே அடுத்த முதல்வராக நான் வருவேன் என கூறுவதே தவறான ஊகமாகும்.

நான் ஏற்கனவே அடுத்த தேர்தலில் போட்டியிட போவது இல்லை என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதை நான் மீண்டும் உறுதி செய்கிறேன். நான் இதுவரை முதல்வராவேன் என எப்போதும் சொன்னதில்லை. ஆனால் ஊடகங்கள் தவறாக தகவல்கள் அளித்துள்ளன. தற்போதைய முதல்வரே ஆட்சியில் தொடருவார். எடியூரப்பாவின் முதல்வர் கனவு நிறைவேறப் போவது இல்லை” என தெரிவித்துள்ளார்.