கராச்சி: எல்லாம் தெரிந்த அறிவாளிபோல் நடந்துகொள்ள வேண்டாமென்றும், விரைவில் அரசியலிலும் குதித்து சவாலாக இருப்பேன் என்றும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு சவால் விடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்டட்.

இவர்கள் இருவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், கடந்த காலங்களில் ஒன்றாக விளையாடியவர்கள்.

மியான்டட் கூறியுள்ளதாவது, “தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிக்கும் பலருக்கு கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது. எதற்காக, இந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் வெளிநாட்டினரை பதவியில் அமர்த்த வேண்டும்?

பாகிஸ்தானில் அந்தளவு ஆட்கள் பற்றாக்குறையா? இதுகுறித்து நான் இம்ரான்கானிடம் பேசவுள்ளேன். நான்தான் அவருக்கு கேப்டனமாக இருந்து வழிநடத்தினேன். அவர் எனக்கு கேப்டனாக இருந்ததில்லை.

இம்ரான்கான் மட்டுமே இந்த நாட்டில் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார். என் வீட்டிற்கு வந்துசென்ற பிறகுதான், அவரால் பிரதமர் ஆக முடிந்தது என்பதை மறந்துவிட வேண்டாம். விரைவில் அரசியலிலும் குதித்து அவருக்கு போட்டியை ஏற்படுத்துவேன்” என்றார் அவர்.