தமிழ் திரைத்துறை நடிகர்கள் போல தனக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக நிர்வாகி தங்கராஜ் என்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின், “இன்று மணமகனாக வீற்றிருக்கக்கூடிய விவேக் மற்றும் மணமகளாக வீற்றிருக்கக்கூடிய கீர்த்தி பிரியா தங்களுடைய இருவர் வாழ்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை நடத்த இருக்கின்றார்கள். நான் மாலையை மாற்றுவதற்காக, மணமகள் கையில் கொடுத்து, அதன்பிறகு மணமகன் கையில் மாங்கல்யத்தை கொடுத்து, இந்த மணவிழா நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்குப் பிறகு, மணமகனாக இருக்கக்கூடிய விவேக், என்னிடத்தில் ஒரு கருத்தினை எடுத்துச் சொன்னார்.

என்னவென்று கேட்டீர்கள் என்றால், நான் உங்களின் தீவிர ரசிகன் என்று சொன்னார். எப்பொழுதும் ரசிகன் என்றால் சினிமா நடிகர்களுக்குத் தான் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அரசியல் வாதியாக இருக்கக் கூடிய எனக்கும் ரசிகர் இருக்கின்றார். சிறு வயதில் இருந்தே நான் உங்களுடைய ரசிகன் என்று சொன்ன பொழுது எனக்கு அது தான் நினைவிற்கு வந்தது.

இன்றைக்கு நீங்கள் என்னுடைய ரசிகனாக மட்டுமல்ல, என்னுடைய உடன்பிறப்புகளில் ஒருவராக, தம்பிகளில் ஒருவராக, நம்முடைய விவேக் இருக்கின்றார். எனவே அவருக்கு இந்த மண விழாவை நடத்தி வைப்பதில், நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைக்கு, தமிழ்நாடு இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதையும் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில், எப்படி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை, தந்திருக்கின்றீர்களோ. அதேபோன்ற வெற்றியைத் தொடர்ந்து வழங்குவதற்கு உறுதியாக இருக்க வேண்டும், துணை நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.