சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், பாஜக அரசின் வஞ்சனையால், அதில் பங்கேற்க முடியாத வாறு,  நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் இன்று ( ஜூலை 27 ) நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாநில முதல்வர்கள் அதை புறக்கணித்து உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவது, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தகவல் வெளியானது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து,   காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் மாநில முதலமைச்சர்கள், திமுக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட சில மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை,. ஆனால், மற்ற மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை தான் புறக்கணித்ததற்கான காரணம் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

“ தலைநகரில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்குகிற பட்ஜெட்டாகதான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று என மத்திய அரசு அடம்பிடிக்கிறது . மாணவ, மாணவிகளின் கல்வி பாழாகுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பாஜக அரசு இருக்கிறது.

தலைநகரில் @NITIAAYOG கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UNFAIRBUDGET4TN PIC.TWITTER.COM/L2RQTORNVD

— M.K.STALIN (@MKSTALIN) JULY 27, 2024

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை மதுரை எய்ம்ஸ் திட்டம் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.