டெல்லி: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி காலம் முடிகிறது. இதையடுத்து, இன்று நடைபெற்ற பிரிவுபசார விழாவில் பிரதமர் மோடி உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இறுதியில், நிறைவுரை ஆற்றிய குலாம்நபி ஆசாத், இந்திராகாந்தி, வாஜ்பாயை புகழ்ந்து பேசினார். தான் இப்போதும் இங்கே இருப்பதற்கு காரணம் இந்திரா காந்தி என்று நெகிழ்ச்சியுடன் கூறியவர்,  பிரச்சினைகளை தீர்க்கும் திறன் குறித்து வாஜ்பாயிடம்  கற்றறிந்தேன் என்றும் தெரிவித்தார்.

குலாம்நபி ஆசாத், கடந்த கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அவருக்கு ராஜ்யசபாவில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத் குறித்து உயர்வாக பேசினார்.

இதையடுத்து, ஏற்புரை ஆற்றி குலாம்நபி ஆசாத் பேசியதாவது, தனக்கு அரசியல் வெற்றிக்கு காரணம் முன்னாள் பிரதமர் இந்திர காந்திதான் என்று கூறியவர், காங்கிரஸ் கட்சியின்மூலம் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரின்  கீழ் பணியாற்ற வாய்ப்புகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.  மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தற்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் பணியாற்ற  தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுஙக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், நாட்டின் மறைந்தமுன்னா பிரதமர் வாஜ்பாய் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கூறியவர்,  பிரச்சினைகளை சமாதானமாக தீர்க்கும் அவரது  திறமை வியப்புக்குரியது.  அனைவரையும்  அனைத்துச் செல்வதன் மூலம்  பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடும் வாஜ்பாயின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று புகழாரம் சூட்டியவர்,   “எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் ஏதாவது ஒன்றைக் கொடுத்து பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை,  நான் வாஜ்பாயிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்றவர்,  “இதன் காரணமாக அவரது தலைமையின் கீழ் பாராளுமன்றத்தை நிர்வகிப்பது மிகவும் எளிதாக இருந்தது என்றார்.

பாகிஸ்தானுக்கு ஒருபோதும் செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் தானும் ஒருவர் என்று கூறிய ஆசாத், பாகிஸ்தானின் சூழ்நிலைகள் குறித்து நான் படித்தபோது,  நான் ஒரு இந்துஸ்தானி முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், நாம், மக்களுக்காக வேலை செய்யும் வரை மற்றும் சட்டங்களை இயற்றும் வரை மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்றவர், நாம் அவர்களுக்கு எதிராக  போராடினால், மக்களின் நம்பிக்கையை இழப்போம் என்றும் மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உரையை முடித்தார்.