சென்னை: 

டல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமான  நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா வுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பத்து நாள் பரோல் வழங்கியுள்ளது.

சசிகலாவின் கணவரான நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.  இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக  நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

இதற்கிடையில், சொத்து குவிப்பு  வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நேற்றே தனது கணவரை காண பரோலுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அதை சிறைத்துறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்துள்ள நடராஜனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல் வழங்கி சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டதாகவும், அதையடுத்து  சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் 10 நாள் பரோல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறையில் இருந்து பரோலில் வரும் சசிகலா நேராக தஞ்சாவூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது  எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் வைக்கப்பட்டுள்ள நடராஜனின் உடல் காலை 11 மணி அளவில் அவரது சொந்த ஊரான  தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

இறுதி சடங்கில் கலந்துகொள்ள சசிகலா வருகிறார்.