சென்னை: நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? என்பது குறித்து தமிர்நாடுஅரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்டுள்ளது. நாய்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டாலும் பலர் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து தமிழக சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக மருத்துவ சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை பின்பற்றாதது போன்றவை உயிருக்கே ஆபத்தானதாக முடியும் என்று எச்சரித்துள்ளது.

ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வெளியான வழிகாட்டுதல்கள்!!

*நாய்கள் கடித்து சிராய்ப்பு, காயங்கள் ஏற்பட்டால் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்

*ரேபிஸ் தடுப்பூசிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி சேமித்து வைக்க வேண்டும்.

*தடுப்பூசிகளை சேமிக்கும்போதும், செலுத்தும்போதும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

*காயத்தின் ஆழத்தை பொறுத்து 3 வகைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

*விலங்குகளின் நாக்கு படுவதாலோ, அவற்றை தொடுவதாலோ, உணவளிப்பதாலோ ரேபிஸ் பரவாது.

*ஆழமான காயங்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியுடன் சேர்த்து ஆர்ஐஜி எனப்படும் தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும்.