மருத்துவ கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (Economically Weaker Section – EWS) 10 சதவீத இடமும் ஒதுக்கிய மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் DY சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் BV நாகரத்னா அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் 2021 – 22 ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பில் சேர இடஒதுக்கீடு கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீத இடங்களும் எம்.எஸ்., மற்றும் எம்.டி. உள்ளிட்ட முதுநிலை படிப்பில் சேர 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக வகைப்படுத்த 8 லட்ச ரூபாய் என்ற அளவீடு எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இதற்காக மத்திய அரசு நடத்திய ஆய்வு என்ன ? இது குறித்த தரவுகள் ஏதும் உள்ளதா ? எதன் அடிப்படையில் 8 லட்சம் என்ற தொகை வரையறுக்கப்பட்டது ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இது அரசின் கொள்கை முடிவு என்று பொத்தம் பொதுவாக கூறமுடியாது என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிகளிடம் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.